தெலங்கானா வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால், பேட்மின்டன் வீராங்கனை அதிர்ச்சி அடைந்தார்.
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
வாக்குப்பதிவின் போது ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதைத் தடுக்க காவலர்கள் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினர், பிற மாநி லங்களைச் சேர்ந்த காவலர்கள் என பல்லாயிரகனக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத் மற்றும் செகந்திரா பாத் பகுதிகளில் மட்டும் 9,100 காவலர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்தவரும் பிரபல பேட்மின்டன் வீராங்கனையுமான ஜ்வாலா கட்டாவும் வாக்களிப்பதற்காக பூத்துக்கு சென்றார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் இப்படி மாயமாக மறைந்தால், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.